Saturday, April 19, 2014

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை தணிக்கை செய்ய சி.ஏ.ஜி.க்கு அதிகாரம் உள்ளது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்யும் அதிகாரம், மத்திய தணிக்கைத் துறை(சிஏஜி) அமைப்புக்கு உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாயில் ஒரு பகுதி மத்திய அரசுக்கு கட்டணமாக வழங்கப்படுகிறது. மத்திய அரசின் வருவாய் ஆதாரங்களை தணிக்கை செய்யும் அதிகாரம் மத்திய தணிக்கைத் துறைக்கு உள்ளது. அதன்படி, தனியார் தொலைத்தொடர்பு நிறுவன கணக்குகளை தணிக்கை செய்ய சி.ஏ.ஜி. முயன்றபோது அதை எதிர்த்து அந்நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
அந்நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவில், “மத்திய அரசுடன் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் லாபத்தை பகிர்ந்து கொள்வதாக சிஏஜி அமைப்பு தவறாக கருதியுள்ளது. இந்நிறுவனங்கள் மத்திய அரசுக்கு உரிமக்கட்டணம் மட்டுமே செலுத்துகின்றன. அது, லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக உள்ளது,” என்று தெரிவித்தன.
இதை ஏற்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி 6-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், “தொலைத்தொடர்பு நிறுவனங் களின் கணக்கில் மத்திய அரசின் வருவாய் அடங்கி இருப்பதால், அந்த கணக்கை தணிக்கை செய்ய சிஏஜி அமைப்புக்கு சட்ட அதிகாரம் உண்டு,” என்று தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு , மொபைல்போன் நிறுவனங்களின் சங்கத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ்.ராதாகி ருஷ்ணன், விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள உத்தரவில், “தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கணக்கை தணிக்கை செய்ய சிஏஜி அமைப்புக்கு அதிகாரம் உண்டு என்று உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சரியானதே,” என்றனர்.